தமிழ்நாடு, புதுச்சேரியில் அதிகபட்ச வெப்ப நிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக் கூடும் எனவும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 106 டிகிரி ஃபாரன்ஹீட்டை ஒட்டி பதிவாகும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 106 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகும் என வானிலை மையம் கணித்துள்ளது.
அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை முதல் வரும் 30ம் தேதி வரை இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
அதே போல், வரும் 31 மற்றும் ஜூன் 1ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.


