அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தவெகவில் இணைந்தார்.
முன்னதாக, அதிமுக இரண்டாக பிரிந்து செயல்பட்ட போது, இவர் ஓபிஎஸ் ஆதரவாளராக சில மாதங்கள் தீவிரமாக செயல்பட்டு வந்தார். அதன் பின்னர், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததால் வெல்லமண்டி நடராஜன் இபிஎஸ் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார். இதையடுத்து, அவருக்கு அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
சமீபத்திய தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு, அதிமுக மீண்டும் இபிஎஸ், எஸ்பிவி-சிவிஎஸ் தரப்பு என இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வந்த நிலையில், அரசியல் மாற்றங்களின் பின்னணியிலும் வெல்லமண்டி நடராஜன் இபிஎஸ் தரப்பிலேயே நீடித்து வந்தார்.
இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதையடுத்து எஸ்பிவி தலைமையிலான அணி இபிஎஸ் அணியில் இணைந்து ஒரே அணியாக செயல்பட தொடங்கியுள்ளனர்.
இதனிடையே, மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பை தொகுதி அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.
இந்நிலையில், அதிமுகவில் ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல் சூழல் காரணமாக அதிருப்தியடைந்த வெல்லமண்டி நடராஜன், தனது மகன் ஜவஹர்லால் நேரு மற்றும் ஆதரவாளர்களுடன் அதிமுகவிலிருந்து விலகியுள்ளார்.
இன்று காலை தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்தை நேரில் சந்தித்த வெல்லமண்டி நடராஜன், அவர் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் நிலவும் உள்கட்சிப் பூசல்களுக்கு மத்தியில் இந்த அதிரடித் திருப்பம் நிகழ்ந்துள்ளது.
தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து, பின்னர் இபிஎஸ் தலைமையில் மீண்டும் அதிமுகவில் இணைந்து செயல்பட்டு வந்த வெல்லமண்டி நடராஜன் தற்போது தவெகவில் இணைந்திருக்கும் முடிவு, தற்போதைய அரசியல் சூழலில் அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


