தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல்முறை அரசுமுறை பயணமாக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் விஜய் நேற்று டெல்லி சென்றார்.
அங்கு தமிழ்நாடு இல்லத்தில் தலைமை செயலாளர் சாய்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து முதலமைச்சர் விஜய்க்கு காவல் துறை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு இல்லத்தில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த முதலமைச்சர் விஜய், மாலை 4.30 மணியளவில் பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்து 10 நிமிடங்கள் பேசினார்.
இதன் போது, நெதர்லாந்து சுற்றுப்பயணத்தில் ஆணைமங்கல செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வந்ததற்கு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் நன்றி தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் மாநிலப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட உள்துறை அமைச்சகத்தால் உரிய தெளிவுரை வழங்க வலியுறுத்தியதுடன், தமிழ்நாட்டில் வான்வழி அமைப்பு மையத்தை நிறுவும்படியும் கேட்டுக் கொண்டார்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சி உச்சநீதிமன்றம், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு முரணானது என்றும் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய இணை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதலின்றி மேகதாது திட்டத்திற்கு அனுமதிக்கக் கூடாது எனவும் கேட்டுக் கொண்டார்.
மேலும், இலங்கையில் உள்ள 58 மீனவர்கள் மற்றும் 266 படகுகளை உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை, வலியுறுத்துபடியும் பிரதமர் மோடியை விஜய் வலியுறுத்தினார்.
அதன்பின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டின் நிதி கோரிக்கைகள் தொடர்பான மனுவை அளித்தார்.
ஓசூர், கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யவும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், ரயில்வே திட்டங்கள், தொழில் வழித்தடங்கள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.
மேலும், தமிழ்நாட்டின் வலுவான கல்விச் சூழலை மேலும் வலுப்படுத்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை தமிழ்நாட்டில் நிறுவிடவும் முதலமைச்சர் விஜய் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


