கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து விலக உள்ளதாக சித்தராமையா அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் கடந்த சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பின்னர், யார் முதல்வர் நாற்காலியில் அமருவது என்பதில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. பிறகு காங்கிரஸ் தலைவர்கள், மேலிடப் பொறுப்பாளர்களின் முடிவின்படி, முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு சித்தராமையாவும் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு துணை முதல்வர் டி.கே. சிவகுமார் முதல்வராகவும் செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2023 மே மாதம் முதல் சித்தராமையா முதல்வராக இருந்து வரும் சூழலில், கர்நாடக முதல்வர் மாற்றம் தொடர்பான விவாதம் கடந்தாண்டு நவம்பர் மாதம் தொடங்கியது.
நேற்று முன்தினம் டெல்லி சென்ற முதல்வர் சித்தராமையா மற்றும் துணைமுதல்வர் டி.கே.சிவகுமாரிடம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், கட்சி மேலிட பொறுப்பாளர் ரனதீப்சிங் சுர்ஜிவாலா ஆகியோர் ஏறக்குறைய 5 மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
இறுதியில் முதல்வர் சித்தராமையாவை பதவி விலகி, டி.கே.சிவகுமாருக்கு விட்டு கொடுக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. கட்சி தலைமையின் முடிவை ஏற்று கொள்வதாக சித்தராமையாவும் உறுதியளித்தார்.
இந்நிலையில், முதல்வர் சித்தராமையா நேற்று காலை ஏற்கனவே கலந்து கொள்ள திட்டமிட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார். பெங்களூரு விதானசவுதா வளாகத்தில், நேரு நினைவு தினத்தில் மட்டும் கலந்து கொண்டு, மலரஞ்சலி செலுத்தினார். பிறகு தனது அரசு இல்லமான காவிரியில் தங்கி இருந்தார்.
இதனிடையே, முதல்வர் சித்தராமையா அலுவலகத்தில் இருந்து ஆளுநரின் மக்கள் பவனுக்கு கடிதம் அனுப்பி சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகை நேரம் ஒதுக்கும்பட்சத்தில் சித்தராமையா அவரது ராஜினாமா கடிதத்தை ஒப்படைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் சித்தராமையா, பெங்களூரு காவிரி இல்லத்தில் உள்ள வீட்டில், இன்று காலை சிற்றுண்டி விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் உள்பட அமைச்சர்கள், கட்சி சட்டப்பேரவை, மேலவை உறுப்பினர்களுக்கு கலந்து கொண்டனர்.
இந்நிலையில், கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து விலக உள்ளதாக சித்தராமையா தெரிவித்துள்ளார்.


