நாடு முழுவதும் கடந்த 2 வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை 6வது முறையாக மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக சந்தையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாத , மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு, தேர்தல் முடிந்ததும் வழக்கம் போல் பெட்ரோல், டீசல் விலையை படிப்படியாக உயர்த்தி வருகிறது. கடந்த 2 வாரங்களில் மட்டும் பெட்ரோல் டீசல் விலை ஒருநாள் விட்டு மறுநாள் என 6 முறை உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களில் சராசரியாக லிட்டருக்கு ரூ.8 வரை உயர்த்தப்பட்டாலும், அது எண்ணெய் நிறுவனங்களின் ஒட்டுமொத்த உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் செலவை ஈடுகட்டப் போதுமானதாக இல்லை என்று பொருளாதார வல்லுநர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
நோமுரா மற்றும் எலாரா கேபிடல் நிறுவனங்களின் கூட்டு ஆய்வறிக்கையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விற்பனை மூலம் ஐஓசி, பிபிஎல், எச்பிஎல் ஆகிய அரசு நிறுவனங்களுக்கு தினமும் 1,380 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், இழப்பை சரிகட்ட பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் வரை உயர்த்தப்படலாம் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், 6வது முறையாக நேற்று பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்தது.
அதன்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 33 காசும், டீசல் லிட்டருக்கு 32 காசும் உயர்த்தப்பட்டது. இதனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.20 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.99.98 ஆகவும் உயர்ந்துள்ளது.
மேற்கு ஆசிய நாடுகளின் போரினால், முக்கிய சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பெட்ரோல், டீசல், சிஎன்ஜி விலை உயர்வால் பேருந்து கட்டணம், சரக்கு போக்குவரத்து செலவு, காய்கறி, பழங்கள், பால், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தொடரும் இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதுடன், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரக்கூடும் என்ற அச்சத்தையும் கவலையையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.


