பிள்ளை பிடிப்பது போல் கட்சிக்கு ஆட்கள் பிடிப்பதாக தமிழிசை குற்றச்சாட்டு
தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலுக்கு பின், அதிமுக இபிஎஸ் தரப்பு, சிவிஎஸ்-பிவிஎஸ் தரப்பு 2 அணிகளாக பிரிந்து செயல்பட்டு வந்த நிலையில், சமரச பேச்சுவார்த்தைக்கு பின் பிவிஎஸ் ஆதரவாளர்களுடன் இபிஎஸ் தரப்புடன் சேர்ந்துள்ளார்.
இதனிடையே, முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட அதிமுகவினர் அமைச்சர்கள் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்.
இது குறித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா 90% அதிமுக எம்எல்ஏக்கள் விரைவில் தவெகவில் இணைவார்கள் என்று கூறினார். இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
தங்கள் கட்சி தான் புதிய அதிமுக என்று பகிரங்கமாக அறிவித்து, அதிமுக மூத்த தலைவர்கள், எம்எல்ஏக்கள், தொண்டர்கள் என பலரையும் விலைபேசி தவெகவுக்குள் இழுத்து வரும் முயற்சியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், பாஜக-வுடன்கூட்டணி வைத்ததால் தான் அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருவதாகவும், குறிப்பாக இந்த கூட்டணி காரணமாக தான் அதிமுக தொண்டர்கள் சோர்வடைந்துள்ளதாகவும் ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் இந்த பேச்சுக்கு, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்து பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய தமிழிசை, அரசியலில் தோல்வி என்பது பல இடங்களில் சகஜமானது. ஒரு காலத்தில் வெறும் 2 எம்பி சீட்களை வைத்திருந்த பாஜக, தற்போது நாட்டை ஆண்டு வருகிறது. தவிர தற்போது சுமார் 21 மாநிலங்களில் ஆளுங்கட்சியாக உள்ளது.
இது பாஜக மக்களுக்குப் பிடித்ததாக இருக்கிறது என்பதை உணர்த்தும் ஒன்று. ஆனால், தவெகவினரோ பிள்ளை பிடிக்கிற மாதிரி எல்லா இடத்திலும் தேடி தேடி உங்கள் கட்சிக்கு ஆட்களை பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள், ஆனால் பாஜக அப்படியல்ல என்று தவெகவை மிக கடுமையாக சாடியுள்ளார்.


