ஆள் பிடிப்பது தொடர்ந்தால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் – ஆதவ் அர்ஜுனாவுக்கு அதிமுக எச்சரிக்கை
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு அதிமுக இபிஎஸ், சிவிஎஸ்-எஸ்பிவி என இரண்டு அணிகளாக செயல்பட்டு வந்தது. இதனால் தவெக அரசு மீதான நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பின் போது சிவிஎஸ்-எஸ்பிவி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேர் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இது அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதன் பிறகு நடந்த பேச்சுவார்த்தையின் விளைவாக எஸ்பிவி தரப்பு சமரசமடைந்து இபிஎஸ் தரப்புடன் இணைந்தது. ஆனால் சிவிஎஸ் என்ன முடிவில் இருக்கிறார் எனத் தெரியவில்லை.
இதனிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், இசக்கி சுப்பையா உள்ளிட்ட 5 எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்தனர்.
இந்நிலையில், சுமார் 90% அதிமுகவினர், தவெகவில் இணைவார்கள் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார். இதற்கு அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவில், உங்கள் கட்சி தலைவர் விஜய்யின் மக்கள் செல்வாக்கு என்ன ஆனது? கேள்விக்குறியாகி விட்டதா? அதனால் தான் விஜய்யின் செல்வாக்கை நிலைநிறுத்த அதிமுகவினரை கூவிக்கூவி அழைக்கிறீர்களா. உங்களுக்கே உங்கள் கட்சி தலைவர் மீதான நம்பிக்கை போய்விட்டதா?
எனவே தான் அதிமுக தொண்டர்களை நாக்கை தொங்கப்போட்டு கொண்டு எங்கள் கட்சியிலே வந்து சேருங்கள் என்று பிச்சை எடுப்பது போல கூவிக்கூவி அழைக்கிறீர்களா? எங்கள் கட்சியில் விசுவாசமாக இருக்கும் தொண்டர்களை விலைபேச முயற்சிக்கிறீர்களே, உங்கள் தலைவரின் செல்வாக்கை நிலைநிறுத்தவே எங்கள் கட்சி தொண்டர்களிடத்தில் பிச்சை கேட்கிறீர்களா? இது எந்த வகையில் நியாயம்?
உண்மையை சொன்னால் இந்த கண்றாவி காட்சியெல்லாம் பார்த்து கொண்டு எப்படி கடந்து போவது என தெரியவில்லை. நீங்கள் தமிழக்தில் எத்தனை கட்சிகள் இருக்கிறதோ அத்தனையிலும் சேர முயற்சி செய்துவிட்டு, கடைசி புகலிடமாக தவெகவில் இருக்கிறீர்கள்.
இப்படிப்பட்ட நீங்கள் அதிமுகவினருக்கு அடைக்கலம் தருவதாக கூறுவதும், எங்கள் கட்சியை குலைக்க முயற்சிக்கும் உங்கள் சித்தாந்தமும் யானை தன் தலையில் மண்ணை வாரி போட்டு கொள்வது போன்ற கதையாகி விடும்.
பல லட்சம் தொண்டர்களின் விசுவாசத்தால் கட்டமைக்கப்ட்ட அதிமுகவை குலைக்க, இனியும் நீங்கள் ஆள் பிடிக்கும் வேலையை தொடர்ந்தால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை எச்சரித்துள்ளார்.


