சர்வதேச சந்தையில் நிலவி வரும் அரசியல் மாற்றங்கள், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவை தங்கம் விலையில் எதிரொலிப்பது வழக்கமாகும். அதன் அடிப்படையிலேயே, தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த வகையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்படப் போவதாக வெளியாகியுள்ள தகவல்கள், உலகப் பொருளாதாரத்தை புதிய பாதையில் கொண்டு சென்றுள்ளது. இதன் காரணமாக, தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் இருப்பதால் நடுத்தர வர்க்க மக்கள் தங்கம் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சமீப காலமாக 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர் தடுமாற்றத்தில் இருந்து வருகிறது. சந்தையில் ஒருநாள் தங்கம் விலை அதிகரித்தால் மறுநாள் அதே தொகையோ அல்லது சற்று குறைவாகவோ சரிவடைகிறது. அதற்கு மறுநாள் மீண்டும் உயர்வது அல்லது குறைவதுமாக திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகளுக்காக நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
வாரத்தின் முதல் நாளான திங்களன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்த நிலையில், செவ்வாயன்று சவரனுக்கு ரூ.400 குறைவு, புதனன்று சவரனுக்கு ரூ.640 சரிவு, வியாழனன்று சவரனுக்கு ரூ. 1,200 குறைவு, நேற்று சவரனுக்கு ரூ.800 உயர்ந்து விற்பனையாகி வந்தது.
இந்நிலையில், வாரத்தின் இறுதி நாளான இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.30 உயர்ந்து கிராம் ரூ.14,630க்கும் சவரன் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 40 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
அதே நேரம், சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை நேற்று கிலோவுக்கு ரூ.5,000 அதிகரித்து விற்கப்பட்ட நிலையில், இன்று வெள்ளி விலை எந்த மாற்றமுமின்றி கிராம் வெள்ளி ரூ.290க்கும், கட்டி வெள்ளி விலை 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.


