கர்நாடகாவில் கடந்த சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பின்னர், யார் முதல்வர் நாற்காலியில் அமருவது என்பதில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
அதன் பிறகு, காங்கிரஸ் தலைவர்கள், மேலிடப் பொறுப்பாளர்களின் முடிவின்படி, முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு சித்தராமையாவும் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு துணை முதல்வர் டி.கே. சிவகுமார் முதல்வராகவும் செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2023 மே மாதம் முதல் சித்தராமையா முதல்வராக இருந்து வரும் சூழலில், கர்நாடக முதல்வர் மாற்றம் தொடர்பான விவாதம் கடந்தாண்டு நவம்பர் மாதம் தொடங்கியது.
கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி சென்ற முதல்வர் சித்தராமையா மற்றும் துணைமுதல்வர் டி.கே.சிவகுமாரிடம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், கட்சி மேலிட பொறுப்பாளர் ரனதீப்சிங் சுர்ஜிவாலா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
இறுதியில் முதல்வர் சித்தராமையாவை பதவி விலகி, டி.கே.சிவகுமாருக்கு விட்டு கொடுக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. கட்சி தலைமையின் முடிவை ஏற்று கொள்வதாக சித்தராமையாவும் உறுதியளித்தார்.
இதையடுத்து, கர்நாடக முதலமைச்சர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை அம்மாநில ஆளுநர் தாவர் சந்த் கெலாட் ஏற்றுக்கொண்டு, அமைச்சரவையைக் கலைத்து உத்தரவிட்டார். புதிய அரசு அமையும் வரை காபந்து முதலமைச்சராக அவர் தொடருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, கர்நாடகத்தின் அடுத்த முதலமைச்சராக டி. கே. சிவக்குமார் பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது.
பெங்களூருவில் இன்று நடைபெறும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக டி.கே.சிவக்குமார் தேர்வு செய்யப்படுகிறார்.
கர்நாடகாவின் 25வது முதலமைச்சராக வரும் ஜூன் மாதம் 3ம் தேதி டி.கே.சிவக்குமார் பதவியேற்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


