தமிழ்நாட்டில் 14 இடங்களில் வெயில் சதம் அடித்த நிலையில், நாளை முதல் வெயில் படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கத்திரி வெயில் எனப்படும் உக்கிர வெயில் காலம் முடிந்த நிலையிலும், தமிழ்நாட்டில் வெயில் தொடர்ந்து சுட்டெரித்து வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக வேலூரில் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
திருச்சி, திருத்தணி, சென்னை விமான நிலையத்தில் தலா 104 டிகிரி வெப்பம் வாட்டி வதைத்தது. கரூர் பரமத்தியில் 103 டிகிரியும், மதுரை நகர், சென்னை நுங்கம்பாக்கம், மதுரை விமான நிலையம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் தலா 102 டிகிரி வெப்பமும் பதிவானது.
மேலும் தஞ்சை, நாமக்கல், காரைக்கால், ஈரோடு, நாகை, பாளையங்கோட்டை ஆகிய இடங்களிலும் தலா 100 டிகிரி வெப்பம் பதிவாகி உள்ளது.
இதனிடையே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரக்கூடும் என்றும் நாளை முதல் தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக குறையும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


