தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.
கேரளாவில் அடுத்த சில தினங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், தமிழகத்திலும் மழைப்பொழிவு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
வளிமண்டல சுழற்சி மற்றும் பருவமழை தொடக்கத்தின் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும், பல இடங்களில் மிதமான மழையுடன் கூடிய இடி மற்றும் மின்னல் தாக்கமும் இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.


