நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டிருந்த நிலையில், பெரம்பூரில் 1,20,365 வாக்குகளும் , திருச்சி கிழக்கில் 91,381 வாக்குகளும் பெற்று அபார வெற்றி பெற்றிருந்தார்.
இதைத் தொடர்ந்து, பெரம்பூர் தொகுதியை தக்க வைத்துக் கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்திருந்தார். திருச்சி கிழக்கு உட்பட மொத்தமுள்ள 9 தொகுதிகளில் 6ல் தவெக வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், திருச்சி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, முதல்வர் விஜய் இன்று திருச்சி செல்கிறார். முதல்வராக பதவியேற்றப்பின் முதல்வர் விஜயின் முதல் திருச்சி பயணம் இதுவாகும்.
முதல்வர் விஜய் திருச்சி செல்வதை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக இன்று திருச்சியில் ட்ரோன்கள் பறக்க மாவட்ட ஆட்சியர் பிரதீக் தயாள் தடை விதித்துள்ளார்.
முதல்வரின் கூட்டம் நடைபெறவுள்ள திருச்சி தூய வளனார் கல்லூரி மைதனாத்தின் ஏற்பாடுகளை அமைச்சரும் தவெக பொதுச்செயலாளருமான என். ஆனந்த் நேற்று பார்வையிட்டார்.
திருச்சி புனித தூய வளனார் கல்லூரி வளாகத்தில் மாலை 4.15 மணி முதல் நடைபெறும் கூட்டத்தில் காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, க்யூஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.
குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் – சிறுமியர், பள்ளி மாணவ – மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள க்யூஆர் குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம் எனக் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு கொள்ளவும், பங்கேற்க அனுமதி பெற்றவர்கள் முழு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


