நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. பின்னர், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், கம்யூ.கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த போது, திமுகவின் மக்கள் நலத் திட்டங்களைத் தொடரும்படி கேட்டுக் கொண்டார்.
திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம் தொடரும் என ஏற்கனவே தவெக தலைமையிலான அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் எவ்விதத் தொய்வும் இன்றி தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட தாயுமானவர் திட்டம் தொடர்வதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மற்றும் நாளை மறுநாள் மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அண்ணா நகர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், அடையாறில் 2 நாள் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


