இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனை மதிப்பு மற்றும் எண்ணிக்கை இரண்டிலும் இதுவரை இல்லாத வகையில் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.
நகர்ப்புறங்கள் முதல் கிராமப்புறங்கள் வரை டிஜிட்டல் கட்டண முறைகள் அன்றாட வணிகத்தோடு வலுவாக ஒருங்கிணைக்கப்பட்டு வருவதையே இந்த அசுர வளர்ச்சி காட்டுவதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ) தரவுகளின்படி, மே மாதத்தில் யுபிஐ பரிவர்த்தனை மதிப்பு ஏப்ரல் மாதத்தை விட 3% அதிகரித்து ₹29.90 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் 2,235 கோடியாக இருந்த யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை, மே மாதத்தில் 4% உயர்ந்து 2,320 கோடி பரிவர்த்தனைகள் என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், பரிவர்த்தனை அளவு சுமார் 24% வளர்ச்சியைக் கண்டுள்ளது.
அதே போல், தினசரி யுபிஐ பரிவர்த்தனைகளின் சராசரி எண்ணிக்கையும் கடந்த ஏப்ரல் மாதத்தில் 74.5 கோடியாக இருந்த நிலையில், மே மாதத்தில் 74.8 கோடியாக சற்று உயர்ந்துள்ளது.
கோடைக்கால சுற்றுலா பயணங்கள், ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மற்றும் பண்டிகை கால செலவுகள் ஆகியவை பரிவர்த்தனை அதிகரிப்பிற்கு முக்கிய காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.
நாட்டின் சுங்கச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் ஃபாஸ்டேக் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தை விட மே மாதத்தில் 5% வரை அதிகரித்துள்ளது.
அதன்படி, ஏப்ரலில் 35.8 கோடியாக இருந்த ஃபாஸ்டேக் பரிவர்த்தனைகள், மே மாதத்தில் 37.5 கோடியாக பதிவாகி கணிசமான உயர்வுடன் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இந்த எண்ணிக்கையின் உயர்வால், ஃபாஸ்டேக் மூலம் வசூலான மொத்த தொகையின் மதிப்பும் 4% அதிகரித்து ₹7,025 கோடியிலிருந்து ₹7,308 கோடியாக உயர்ந்துள்ளது.


