மத்திய அரசு மே மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜிஎஸ்டி) ரூ. 1.94 லட்சம் கோடி வசூலித்துள்ளதாகவும், இது கடந்தாண்டின் இதே மாதத்தில் வசூலான ரூ.1.88 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது, 3.2% அதிகம் என்றும் நிதி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ரூ.2.43 லட்சம் கோடி வரலாற்று சாதனை வசூல் எட்டப்பட்ட நிலையில், மே மாதத்தில் அது சற்று குறைந்துள்ளது.
திரும்பப்பெறுதல்களை (ரீஃபண்ட்) கணக்கிட்ட பிறகே நிகர ஜி.எஸ்.டி வருவாய் கணக்கிடப்படுகிறது. மே மாதத்தில் நிகர ஜிஎஸ்டி வருவாய் 3.3% அதிகரித்து ரூ.1.67 லட்சம் கோடியாக உள்ளது. மே மாதம் வசூலான மொத்த ஜிஎஸ்டி, ஏப்ரல் மாதத்தின் சாதனை அளவான ரூ. 2.43 லட்சம் கோடியை விட 20% குறைவாகும்.
அதிகளவிலான அத்தியாவசிய மூலப்பொருட்கள் மற்றும் மின்னணு சாதனங்களின் இறக்குமதியே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
மேலும், கடந்தாண்டு இதே கால கட்டத்தின் மறைமுக வரி எண்ணிக்கையானது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்காக தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்று செலுத்திய ரூ.10,000 கோடி ஒருமுறை கட்டணத்தால் அதிகரித்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் இந்த ஒருமுறை கட்டணத்தைச் சரிசெய்து பார்த்தால், மே 2026ல் மொத்த ஜிஎஸ்டி வருவாய் 9% வளர்ச்சி அடைந்திருக்கும், இதில் உள்நாட்டு மொத்த ஜிஎஸ்டி வளர்ச்சி 5% ஆக இருந்திருக்கும் என்று நிதி அமைச்சகத்தின் ஜிஎஸ்டி தரவு வெளியீட்டின் அடிக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இருப்பினும், சமீபத்திய தரவுகள் நுகர்வில் சில மந்தநிலைக்கான அறிகுறிகளைக் காட்டுகின்றன. கடந்த மாதம் மொத்த ஜிஎஸ்டி வசூல் ஆண்டுக்கு ஆண்டு 3.2% உயர்ந்திருந்தாலும், மொத்த உள்நாட்டு வருவாய் 2.6% குறைந்து ரூ. 1.35 லட்சம் கோடியாக உள்ளது.
மே மாதத்தில் உள்நாட்டு ஜிஎஸ்டி வருவாய் வீழ்ச்சியடைந்த நிலையில், இறக்குமதி மூலமான வருவாய் 19.1% உயர்ந்து ரூ. 59,654 கோடியாக அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன.
மீண்டும், இறக்குமதியிலிருந்து கிடைக்கும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி (ஐ.ஜி.எஸ்.டி) வருவாயின் உயர்வு “தொழில்துறை திறன் விரிவாக்கத்தை உணர்த்துகிறது” என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மீதான ஐஜிஎஸ்டியும் மே மாதத்தில் கடுமையாக உயர்ந்துள்ளது. இது எஃகு ஆலைகள், சிமெண்ட் உலைகள் மற்றும் அனல் மின் நிலையங்களின் அதிகரித்த எரிபொருள் மற்றும் கோக்கிங் நிலக்கரி தேவைகளைப் பிரதிபலிக்கிறது.


