மதிமுக எம்எல்ஏக்களை வற்புறுத்தி ராஜினாமா செய்ய வைக்கும் முயற்சியில் வைகோ ஈடுபட்டுள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வலுவான கூட்டணி அமைத்த போதும், தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இருப்பினும், ஆட்சி அமைப்பதற்கான தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் தவெக ஆட்சி அமைக்க முடியாமல் திணறிய நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக உடன் கைகோர்த்திருந்த விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்தன.
இந்த கட்சிகள் தவெக ஆட்சி அமைக்க மட்டுமே ஆதரவு எனவும், திமுக கூட்டணியில் தொடர்வதாகவும் அறிவித்தன. ஆனால், அடுத்த சில நாட்களில் ஆதரவு தெரிவித்த கட்சிகளில் சில திமுகவுக்கு எதிரான நிலைபாட்டை எடுத்தன. அந்த கட்சிகளுக்கு தவெக அமைச்சரவையில் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், திமுக கூட்டணியில் இருந்து மற்றுமொரு கூட்டணி வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக கூட்டணியில் இடம்பெற்ற மதிமுக 4 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. இதில் கடையநல்லூர் தொகுதியில் டி.எம்.ராஜேந்திரன், சீர்காழி தொகுதியில் செந்தில் செல்வன் ஆகியோர் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில் மதிமுகவின் போக்கில் மாற்றம் ஏற்பட தொடங்கியுள்ளது. அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு தற்போது மதிமுகவும் தவெகவுடன் இணையும் முடிவில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் எதிரொலியாக தான் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி கூற சென்ற முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த மதிமுக எம்பி துரை வைகோ திருச்சி விமான நிலையத்தில் அவரை வரவேற்றுள்ளார்.
இதைத் தொடர்ந்தே, ஜூன் 27ம் தேதி நடைபெற உள்ள மதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் திமுக கூட்டணியில் தொடர்வதா? வேண்டாமா? என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ பேட்டியளித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேர்தலின் போது 4 தொகுதிகளை ஒதுக்கிய திமுக 3ல் உதயசூரியனிலும் ஒரு தொகுதியில் மதிமுகவின் சின்னத்திலும் போட்டியிட நிர்ப்பந்தித்தது. ஆனால் 24 மணி நேரம் கூட கடக்காத நிலையில், 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும்படி வற்புறுத்தியதாகத் தெரிவித்தார்.
மேலும், வரும் 27ம் தேதி நடைபெறும் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் திமுகவுடன் தொடர்வது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார்.
இதன் மூலம், தவெக ஆதரவு என்ற நிலைபாட்டை மதிமுக எடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
மதிமுகவில் தற்போது உதயசூரியன் சின்னத்தில் நின்று போட்டியிட்டதால் வெற்றி பெற்ற 2 எம்எல்ஏக்கள் திமுக எம்எல்ஏக்கள் கணக்கில் சேர்ந்துவிடுவர். எனவே, தவெகவிற்கு ஆதரவு எனக் கூறிவிட்டு மதிமுக எம்எல்ஏக்களை நகர்த்த முடியாது என்பதால் அவர்களை ராஜினாமா செய்ய வைத்து, தவெக உடன் கூட்டணி அமைத்து அதன் பிறகு வரும் இடைத்தேர்தலில் போட்டியிட வைக்க வைகோ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகள் காலியாக இருக்கின்றன. இத்துடன் மதிமுகவின் 2 தொகுதிகளுக்கும் சேர்த்து 7 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பிருக்கிறது.
இந்த நிலையில், சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் விடுதியில் வரும் 27ம் தேதி மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.
வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோவின் முடிவுக்கு எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் பதவியை ராஜினாமா செய்ய மாட்டோம் என்பதில் அவர்கள் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் வைகோ தரப்பு அவர்களை மிரட்டி பணிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. திமுக ஆதரவு தரப்பு எம்எல்ஏக்கள் ஒரு பக்கம் இருப்பதால் வைகோ எடுக்கப் போகும் முடிவை பொறுத்து மதிமுக இரண்டாக உடைய வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.


