திருச்சி கிழக்கில் முதல்வர் விஜய் நன்றி தெரிவித்து நேற்று பேசிய பேச்சு, தற்போது வரை கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.
இது தொடர்பாக, திமுக எம்பி கனிமொழி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தராஜன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், திமுக மூத்த தலைவரும் எம்பியுமான ஆ.ராசா, தான் ஒரு முதலமைச்சர் என்ற பொறுப்பில்லாமல் திருச்சியில் விஜய் பிதற்றி இருப்பதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.
சட்டமன்றத்தில் பேசும் போது தயக்கம், தளர்வு, சோர்வு, மயக்கத்துடன் பேசிய முதல்வர் விஜய் நேற்று கர்ஜிப்பதாக கூறி கத்தி, கத்தி பேசினார். அதிமுகவை அல்லு, சில்லு என்று விமர்சித்த விஜய், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அவர்களில் ஒருபிரிவினரிடம் சென்று ஆதரவு கேட்டது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ரிசர்வ் வங்கியின் விதி தெரியாமல் பயிர்க்கடன் தள்ளுபடி செய்துள்ளது தவெக அரசு. தற்போது நிலவும் மின்தடைக்கு கூட திமுக மீது பழி போடுவதா! உங்களுடைய நடத்தை மற்றும் தேர்தல் அறிக்கையில் நாணயம் உள்ளதா? என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
எங்களை அந்த சக்தி, இந்த சக்தி என்று விமர்சிக்கிறாரே ஆனால் ஆட்சி பொறுப்பேற்றும் கூட எதையும் செய்ய கூட துப்பில்லாத சக்தியாக தவெக இருக்கிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஒரு முதல்வராக இருந்து கொண்டு நக்கல், நையாண்டி பேசுவது அழகல்ல, அதை அவரது கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பேசலாம்.
அதே போல், மேகதாது பிரச்சினையில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் ஆட்சியில் திமுக இருந்த வரை தான் எங்களுக்கு பிரச்சினை, விஜய் எல்லாம் எங்களுக்கு ஒருபொருட்டே இல்லை, எங்கள் தயவில் தான் அங்கே ஆட்சி நடக்கிறது. எனவே, மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று விஜய்யை ஒரு ஆளே இல்லை என்று சொல்லாமல் சொல்கிறார்களே அதற்கெல்லாம் உங்கள் பதில் என்ன என்று கேட்டுள்ளார்.
திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி மற்றவர்கள் எல்லாம் அல்லுசில்லு என்கிறார். முதலமைச்சரே உங்களுக்கு சங்கடமா இல்ல. அல்லு சில்லுகளின் வீட்டிற்கு நீங்களே சென்று சால்வை போட்டு ஓட்டை வாங்கினீர்களே. அந்த அல்லு சில்லுகளிடம் கெஞ்சி கூத்தாடியது தில்லு முல்லா? அரசியல் அநாகரீகமா? என்று ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.


