திருச்சி கிழக்கில் நடைபெற்ற நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜோசப் விஜய் ஆற்றிய உரையை சமூக வலைதளங்களில் தற்போது வரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக, திமுக எம்பி கனிமொழி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தராஜன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது முதல்வராக இருக்கும் விஜய்யின் முதல் பேச்சு திருச்சியில் தொடங்கியது. ஆனால் இதில் வருத்தப்பட கூடிய விஷயம் என்ன்வென்றால், அவர் தான் இப்போது முதலமைச்சராக இருக்கிறோம் என்றே நினைவில் கொள்ளாமல், முழுக்க முழுக்க பழைய நினைப்பில் அதாவது தேர்தல் பிரசாரத்தில் பேசுவதை போலவே பேசியிருப்பது பலரின் முகச்சுளிப்பிற்கு ஆளாகி உள்ளது என்று விமர்சித்து உள்ளார்.
மேலும், அரசியல் தெரிவுள்ளவர்களால் ஏற்று கொள்ள முடியாததாக அவரின் திருச்சி பேச்சு அமைந்துள்ளது. முதல்வர் இது போன்று பேசும் போக்கை மாற்றி கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகள் சொல்வது அறிவுரை அல்ல. ஆளும் கட்சியாக இருந்த ஒரு கட்சி, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக இருப்போம் என்று சொல்கிறது.
எனவே, எதிர்க்கட்சிகள் என்னென்ன குறைகள் சொல்கிறார்களோ அவற்றை உன்னிப்பாக கேட்டு, ஆராய்ந்து அதற்குரிய பதிலையும், தன் ஆட்சியினுடைய கொள்கை என்ன என்பதையும் மக்களுக்கு விளக்குவது தான் முதல்வரின் முக்கியமான கடமை.
அந்த வகையில் முதல்வரின் திருச்சி பேச்சு மக்களுக்கு மாற்றத்தை தரவில்லை, ஏமாற்றத்தையே தந்திருக்கிறது என கி.வீரமணி கடுமையாக சாடியுள்ளார்.


