தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் விஜயின் தவெக அறுதிப்பெரும்பான்மை பெற முடியாததால், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற காங்கிரஸ், விசிக, கம்யூ.கட்சிகள், ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.
இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு விஜயின் உருவ பொம்மையுடன் நன்றி தெரிவித்தது கிண்டலுக்குள்ளானது.
ஏனெனில், தோல்வியுற்ற நிலையிலும், வாக்கு எண்ணிக்கைக்கு மறுநாளே கொளத்தூர் தொகுதியின் வேட்பாளரும் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அத்தொகுதியில் திறந்த வேனில் நேரில் சென்று நன்றி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தவெக அரசின் மீன்வளத்துறை அமைச்சரும் முதல்வர் விஜயின் நெருங்கிய நண்பருமான ஸ்ரீநாத் கடந்த 30ம் தேதி திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனத்திற்கு வருகை தந்திருந்தார்.
இதையடுத்து மணப்பாடு, அமலி நகர், வீரபாண்டியப்பட்டணம் உட்பட பல்வேறு பகுதிகளில் மக்களை சந்தித்தார். தொடர்ந்து, திருச்செந்தூர் தொகுதியைச் சேர்ந்த புன்னைக்காயல் பகுதிக்கு சென்ற அமைச்சர் அங்கு திறந்த காரில் நின்றபடி ‘எல்லாருக்கும் வணக்கம், வணக்கம், வணக்கம். புன்னைக்காயல் மக்களே ஐ லவ் யூ, லவ் யூ, லவ் யூ, லவ் யூ. உங்கள் அன்புக்கு, ஆதரவுக்கு ரொம்ப நன்றி. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்ன ஜெயிக்க வச்ச உங்க ஊருக்கு, உங்க மக்களுக்கு, ‘நம்ம மக்களுக்கு’ கோடான கோடி நன்றிகள் எனப் பேசினார்.
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மக்கள் குறைகளை கேட்காமல் அவர் வெற்றி பெற்ற தூத்துக்குடி தொகுதி இல்லை என தெரியாமல் திருச்செந்தூர் தொகுதி மக்களுக்கு தன்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்ததற்கு நன்றி தெரிவித்ததை அதிமுக நிர்வாகி ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘தொகுதி தெரியாமல் உளராத, காமெடி ஷோ கண்டினியூ, சினிமாவிலேயே சுத்தமாக நடிக்க வராது, அரசியலில் நல்லா நடிச்சி பழகிட்ட, எந்த தொகுதி எனத் தெரியாமல் நன்றி தெரிவிப்பதா என பல்வேறு வகையில் அமைச்சர் ஸ்ரீநாத்தை கலாய்த்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வறுத்தெடுத்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.


