பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிராமத்தில் தெரணி செல்லும் சாலையில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக, எஸ்பி லலித்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில், அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்த தனிப்படை போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். அதன்படி, தனிப்படை போலீஸார் தீவிர சோதனை நடத்தியதில், பாடாலூர் டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது தெரிய வந்தது.
இதையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்த போலீசார் அங்கு சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்று வந்த, பாடாலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் மகன் உமேஷ் (36) என்பவரை கைது செய்தனர்.
பின்னர் நடத்திய விசாரணையில், அவர் அரசு டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை மொத்தமாக வாங்கி வந்து, கூடுதல் விலைக்கு சட்டவிரோதமாக விற்றது தெரிய வந்தது.
அதன் பிறகு, உமேஷிடம் இருந்த சுமார் 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் அவரை, பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். உமேஷ் ஆலத்தூர் ஒன்றிய செயற்குழு உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்றும் தப்பியோடிய அவரது கூட்டாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


