கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நீலகிரி, கோவை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் நாளை ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
மேற்கூறிய இந்த மூன்று மாவட்டங்களிலும் ‘தயாராக இருத்தல்’ மற்றும் ‘அதிக ஆபத்து’ என்பதைக் குறிக்கும் இரண்டாவது மிக முக்கிய நிலையான ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளதால் மிகக் கனமழை முதல் அதி கனமழை (6 செ.மீ முதல் 20 செ.மீ வரை) பெய்ய வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழ்நாட்டில் நாளை 23 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக தேனி, தென்காசி, திருநெல்வேலி, நெல்லை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, விருதுநகர் மாவட்டங்களிலும் மதுரை, சிவகங்கை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் நாளை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தலைநகர் சென்னையிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இது தவிர, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.


