மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 13ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. இதில் தேசிய அளவில் 85.20% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதனிடையே, சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்கள் டிஜிட்டல் வழி மதிப்பீட்டு முறையில் (ஓஎஸ்எம்) திருத்தப்பட்டு வெளியான முடிவுகள் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகின்றன.
இந்நிலையில், இது தொடர்பாக டெல்லி பெற்றோர் சங்க தலைவர் அப்ரஜிதா கவுதம் நேற்று அளித்த பேட்டியில், ஓஎஸ்எம் டிஜிட்டல் மதிப்பீட்டு முறைக்கான சோதனை குறுகிய காலத்திற்கு மட்டுமே நடத்தப்பட்டது. அதில் குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் மட்டுமே ஈடுபட்டனர்.
இதில் ஆசிரியர்களிடம் இருந்து கருத்துகள் முறையாக பெறப்படவில்லை. பயிற்சி, முறையான தயாரிப்புக்காக அவர்களுக்கு போதுமான நேரமும் தரப்படவில்லை. ஓஎஸ்எம் செயல்முறையில் உள்ள பிரச்சினைகள் குறித்து மாணவர்கள் இந்தளவு ஆதாரங்களை பகிர்ந்து கொண்ட பிறகும் அதிகாரிகள் அனைத்தும் சரியாக இருப்பதாகக் கூறுவது மிகவும் வருத்தமளிக்கிறது.
தவறுகள் நடந்திருக்கலாம் என ஏன் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்? இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் பல மாணவர்களால் அவர்களின் மறுமதிப்பீட்டிற்கான விடைத்தாளின் ஸ்கேன் நகல்களைக் கூட பெற முடியவில்லை. அவர்கள் எப்படி நிவாரணம் தேடுவார்கள்.
இது தவிர, விடைத்தாள் திருத்தும் பணியில் முதுகலை ஆசிரியர்களுடன் பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். அதன் தரவுகள் பொது வெளியில் வெளியிடப்பட வேண்டுமென்று அவர் கூறினார்.


