வெனிசுலா நாட்டின் அதிபராக இருந்த நிகோலஸ் மதுரோவை அமெரிக்க அரசு கைது செய்ததைத் தொடர்ந்து, துணை அதிபராக இருக்கும் டெல்சி ரொட்ரிகஸ் அந்நாட்டின் இடைக்கால அதிபரானார்.
இந்நிலையில், இடைக்கால அதிபர் டெல்சி 5 நாள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். அவர் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
இதன் போது எரிசக்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் ருத்ரா டாண்டன் கூறுகையில், பிரதமர் மோடியுடன் வெனிசுலா இடைக்கால அதிபர் டெல்சி பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், எரிசக்தி, வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்தனர்.
இந்த ஆலோசனையின் போது, இந்தியாவுக்கு கூடுதல் எரிபொருள் வினியோகிக்க பரிசீலிக்கப்பட்டது. எரிசக்தியைத் தவிர்த்து, கால்நடை வளர்ப்பு, போக்குவரத்து, விவசாய உபகரணங்கள், ஆட்டோமொபைல் துறை, மருந்துத் துறை உள்ளிட்ட இதர துறைகளில் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் விவாதங்கள் நடைபெற்றதாகத் தெரிவித்தார்.


