காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னையை தீர்க்கும் வகையில், உச்ச நீதிமன்றத்தால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காவிரியின் குறுக்கே ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா மேகதாது பகுதியில் சுமார் ரூ.9,000 கோடியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த நீதிமன்றம், மேகதாது அணை திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்ததோடு, மத்திய நீர்வள ஆணையம் இறுதி முடிவெடுக்கும் முன்பாக காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரைகளைப் பெறும்படியும், தமிழக அரசுடன் கண்டிப்பாக ஆலோசிக்க வேண்டும் என்றும் கடந்தாண்டு நவம்பர் 13ம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு கடந்த சில தினங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இத்தகைய சூழலில், மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தற்போது புதிய மனுவை தாக்கல் செய்தது.
அந்த மனுவில், ‘காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை சட்டவிரோதம் என்று அறிவித்து ரத்து செய்யும்படியும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி உட்பட எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது எனவும் கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேகதாது விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டதாக நேற்று முன்தினம் பதவியேற்ற கர்நாடக புதிய முதல்வர் டி.கே.சிவகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், மேகதாது விவகாரத்தில் மத்திய அரசுதான் இனி முடிவு எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


