நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து அதற்கான முன்னேற்பாடுகள் செய்து முடித்த பிறகு உடல் நலம் காரணமாக அரசியல் முடிவை கைவிட்டார்.
அதே நேரம், அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக தயா பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.
இந்த அறக்கட்டளை மூலமாக அவர் ஒரு புதிய இயக்கத்தை தொடங்க முடிவு செய்திருந்தார்.
கடந்த டிசம்பர் 21ம் தேதி சென்னை கிண்டியில் லதா ரஜினிகாந்த் தலைமையில் தயா பவுண்டேஷன் அமைப்பின் முதன்மை சிறப்பு உயர்மட்ட குழு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் தங்களது மாவட்டங்களில் பாரம்பரிய தொழில்கள் நசிந்து விட்டதாகவும் அந்த பாரம்பரிய தொழில்களை செய்த மக்கள் தற்போது வாழ்வாதாரம் இன்றி தவித்து வருவதாகவும் குறிப்பிட்டார்கள்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முக்கியப் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அதற்கான தீர்வுகளை நோக்கி லதா ரஜினிகாந்த் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் களப்பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், லதா ரஜினிகாந்த் சமூக சேவை மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக ‘மக்கள் மேடை’ என்ற புதிய இயக்கத்தை சென்னையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார்.
‘பாரத் சேவா’ மற்றும் ‘ஸ்ரீ தயா அறக்கட்டளை’ ஆகியவற்றின் மூலம் பல ஆண்டுகளாக அவர் ஆற்றிவரும் மக்கள் நலப் பணிகளை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் கிராமப்புற மற்றும் பாரம்பரிய தொழில்களை மீட்டெடுப்பது, நலிவடைந்த கலைஞர்களுக்கு ஆதரவளிப்பது மற்றும் மக்களுக்கான அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது இதன் முக்கிய நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது முழுக்க முழுக்க சேவை சார்ந்த மக்கள் இயக்கமாகவே செயல்படும் என்று அவர் அறிவித்துள்ளார். ஜனநாயகம் என்பது மக்களுக்கானது என்பதால், மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற தத்துவத்தை இந்த இயக்கம் முன்வைக்கிப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் தங்களுடன் கைகோர்க்கலாம் எனவும் ஒன்றாக சேர்ந்து ஒரு பெரும் மக்கள் சக்தியாக உருவெடுத்து பல நல்ல காரியங்களை செய்வோம் என அழைப்பு விடுத்துள்ளார்.


