மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில் அக்கட்சியின் 58 எம்எல்ஏக்கள் பிரிந்து ஒரு அணியாக செயல்படத் தொடங்கி இருப்பது முன்னாள் முதல்வர் மம்தாவிற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. 15 ஆண்டுகளாக முதல்வராக இருந்த அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி அவர் போட்டியிட்ட பவானிபூர் தொகுதியில் தோல்வியை சந்தித்தார்.
அம்மாநிலத்தில் முதல்முறையாக பாஜ தலைமையிலான அரசு அமைந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய சுவேந்து அதிகாரி முதல்வராக பதவியேற்றுள்ளார்.
இந்த சூழ்நிலையில் வலுவான கட்சியாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் விரிசல் ஏற்படத் தொடங்கி உள்ளது. மொத்தமுள்ள 80 எம்எல்ஏக்களில் 58 அதிருப்தி எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்படத்தொடங்கியிருப்பது கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
அதிருப்தி எம்எல்ஏக்கள் மம்தாவின் தலைமையைத் தொடர்ந்து அங்கீகரிக்கும் அதே வேளையில் அவரது மருமகனும் அரசியல் வாரிசுமான அபிஷேக்கின் அதிகாரத்தை நிராகரிக்கின்றனர்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 28 மக்களவை உறுப்பினர்கள் மற்றும் 13 மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளனர். இந்த அதிருப்தி விவகாரம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஏற்படுத்தும் எந்தவொரு மாற்றமும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அடித்தளத்தையே அசைக்கக்கூடும்.
இதில் ஏற்படும் எந்தவொரு மாற்றமும் மம்தா பானர்ஜியின் தேசிய அளவிலான செல்வாக்கை மட்டுமின்றி, எதிர்க்கட்சி கூட்டணியின் ஒட்டுமொத்த பலத்தையும் பலவீனப்படுத்தக்கூடும்.
எனவே திரிணாமுல் காங்கிரசை பொறுத்தவரை அமைப்பை கட்டியெழுப்புவதை போலவே கிளர்ச்சியை அடக்குவதும் முக்கியமாக உள்ளது. மேலும் அதிருப்தி எம்எல்ஏக்கள் அணியானது ஏற்கனவே திரிணாமுல் காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக உரிமை கோரியுள்ளனர். எதிர்த் தரப்பு தேர்தல் ஆணையத்தை அணுகினால் இந்த போராட்டம் சட்டப்பேரவையில் இருந்து சட்டரீதியான போராட்டமாக மாறக்கூடும்.
தேர்தல் ஆணையம் கட்சியின் சின்னத்தை ஏதாவதொரு பிரிவுக்கு வழங்கக்கூடும் அல்லது சின்னத்தை முடக்கக்கூடும், இரு அணியையும் புதிய சின்னங்களின் கீழ் போட்டியிடுமாறு உத்தரவிடவும் வாய்ப்புள்ளது.
தனது அரசியல் அனுபவத்தைக் கொண்டு மேற்கூறிய அனைத்தையும் கருத்தில் கொண்டு முன்னாள் முதல்வரும் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி அடுத்த நடவடிக்கையை எடுப்பார் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
மம்தா நேற்று தனது வீட்டில் நடத்திய கூட்டத்தில் 8 எம்எல்ஏக்களும், 6 எம்பிக்களும் மட்டுமே கலந்து கொண்டனர். இதனால் எம்பிக்களும் பிரிந்து செல்லும் வாய்ப்பு உருவாகி உள்ளது. கட்சித் தாவல் தடைச் சட்ட விதிகளின்படி, நாடாளுமன்றக் கட்சியின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு கொண்ட ஒரு குழு, சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட சூழ்நிலைகளின் கீழ் பிரிந்து சென்றால், தகுதி நீக்க நடவடிக்கையிலிருந்து தப்ப வாய்ப்பிருப்பது குறிப்பிடத்தக்கது.


