முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து, தற்போது 18 வயது நிறைவடைந்தும் இன்னும் முதிர்வுத் தொகை கிடைக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, சென்னை மாவட்டம், மாவட்ட சமூகநல அலுவலகத்தின் மூலம் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து 18 வயது நிறைவடைந்த பயனாளிகளுக்குத் தற்போது முதிர்வுத் தொகை பெற்று வழங்கும் பொருட்டு, இதுவரை இத்திட்டத்தில் பதிவு செய்து முதிர்வுத் தொகை கிடைக்காத 18 வயது நிரம்பிய பயனாளிகளின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வைப்பு நிதி பத்திரம், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்று, பயனாளியின் வங்கி கணக்கு புத்தகம், ஆகிய ஆவணங்களோடு மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், சிங்காரவேலர் மாளிகை, 8-வது தளம், இராஜாஜிசாலை, சென்னை அலுவலகத்திலுள்ள சமூக நல விரிவாக்க அலுவலர் மற்றும் நகர்நல அலுவலர்களிடம் முதிர்வுத் தொகைக்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு மக்கள் தொடர்பு அலுவலர் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


