அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேர் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் மரிய வில்சன் முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்று திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், கம்யூ.கட்சிகளின் ஆதரவுடன் தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றார்.
இதைத் தொடர்ந்து, திமுக, அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் ஏராளமானோர் தவெகவில் இணைந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக, அதிக எண்ணிக்கையிலான அதிமுகவைச் சேர்ந்தவர்கள் தவெகவில் இணைந்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக, அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் எம்எல்ஏவும் முன்னாள் டி.ஜி.பி.யுமான நட்ராஜ் தவெகவில் இணைந்தனர்.
இந்நிலையில், அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர்களாகவும், முக்கிய மூத்த நிர்வாகிகளாகவும் இருந்த எம்.சி. சம்பத், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம். ஆனந்தன், என்.ஆர். சிவபதி உள்பட பலர் தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன் முன்னிலையில் இன்று தவெகவில் இணைந்தனர்.
மேலும், பாப்பிரெட்டிபட்டி முன்னாள் எம்எல்ஏ கோவிந்தசாமி, சங்ககிரி முன்னாள் எம்எல்ஏ சுந்தரராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் எம்எல்ஏ மான்ராஜ், சிவகாசி முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன், கலசப்பாக்கம் முன்னாள் எம்எல்ஏ பன்னீர்செல்வம் உள்ளிட அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 10 பேரும் தவெகவில் இணைந்தனர். இந்த அதிரடி கட்சித்தாவல் அதிமுகவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று நடந்த பிரமாண்ட இணைப்பு விழாவில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகள் ஒரே நேரத்தில் தவெகவில் இணைந்ததால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே 3 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் இன்று தவெகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்பொழுது அதிமுக முன்னாள் அமைச்சர்கள்5 பேர் உள்பட முன்னாள் எம்எல்ஏக்கள் 10 பேரும் தவெகவில் இணைந்தனர்.
ஏற்கனவே அதிமுகவில் இருந்த உட்கட்சி பூசல்கள் காரணமாக, இபிஎஸ் தலைமையின் மீது அதிருப்தி அடைந்திருந்த தலைவர்கள் பலர் தவெகவில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


