தமிழகத்தின் 17வது சட்டமன்றத்தின் முதல் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது. தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இதுவாகும்.
சட்டமன்றத்தில் அவையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, முடிவில் தேசிய கீதம் பாடுவதே மரபு. இதை மாற்றி, இன்று தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தேசிய கீதமும் பாடப்பட்டது. ஆளுநர் உரைக்கு பின்னரும், சட்டப்பேரவையின் மரபு மாற்றப்பட்டு 2வது முறையாக தேசிய கீதம் பாடப்பட்டது.
முன்னதாக, சட்டமன்றத்துக்கு வருகை தந்த முதல்வர் விஜய்க்கு காவலர் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். அதைத் தொடர்ந்து சட்டமன்றத்துக்கு வருகை தந்த ஆளுநர் அர்லேகரை சபாநாயகர் பிரபாகர், அவை முன்னவர் செங்கோட்டையன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் பேரவையில் அண்ணா, பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் பெயரை குறிப்பிட்டு ஆளுநர் அர்லேகர் தனது உரையை தொடங்கினார்.
அண்ணா, எம்ஜிஆருக்கு பின் விஜய் புரட்சி செய்து உள்ளதாக தனது உரையில் குறிப்பிட்ட ஆளுநர், மாநில உரிமை, பெண்கள் பாதுகாப்பு, சமூக நீதி, சமவாய்ப்பு உள்ளிட்டவையே தவெக அரசின் அடிப்படை கொள்கைகள் என்று குறிப்பிட்டார்.
கொள்கை தலைவர்கள் வழியில் தமிழ்நாட்டில் ஆட்சி நடைபெறும் எனவும் தமிழக வெற்றிக் கழகம் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதாகவும் ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார்.
மேலும், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், காமராஜர், ராணி வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் வழியில் இந்த அரசு செயல்படும் என ஆளுநர் கூறினார்.
தொடர்ந்து பேசிய ஆளுநர், தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய பல்வேறு நிதி தொடர்பாக மத்திய அரசிடம் முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இதை பரிசீலனை செய்து அனுமதி அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
மேலும், இந்த அரசு தேசிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்க்கிறது. தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடரும். மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால் தான் நிதி விடுவிக்கப்படும் என்பதை மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும். தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க இந்த அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் சட்ட நடவடிக்கைகள் தொடரும். பல்வேறு நிதி நெருக்கடிக்கு இடையிலும் சிங்கப்பெண் அதிரடிப் படை உள்ளிட்ட திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி உள்ளது.
நிதி பகிர்வில் தமிழகத்திற்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. எனவே தமிழக நலனில் அக்கறை செலுத்தும்படி மத்திய அரசை, தவெக அரசு வலியுறுத்தும். அரசுக்கு வரும் வருவாய் இழப்பீட்டை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. பயிர் கடன் தள்ளுபடியால் 14 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள்.
முந்தைய அரசின் தொழில் கொள்கைகளை தொடர்வதுடன், புதிய தொழில் கொள்கையை தமிழக வெற்றிக் கழக அரசு வெளியிட உள்ளது. தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் அமைக்கப்படும்.
நிதி பற்றாக்குறை இருந்தாலும் தவெக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று தவெக அரசால் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட அறிக்கையை அப்படியே வரி மாறாமல் ஆளுநர் வாசித்தார்.
உரை முடிவடைந்தவுடன் ஆளுநர் தனது இருக்கையிலிருந்து எழுந்து சட்டமன்றத்தில் இருந்து முறைப்படி புறப்பட்டுச் சென்றார்.


