இந்தியாவில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதி பெறுவதற்கான ‘வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்ட’ விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் திருத்தியமைத்து புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்டத்தின் (எப்சிஆர்ஏ) கீழ், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (என்ஜிஓக்கள்) நிதி பெறுவதற்கான விதிமுறைகளை 2011ம் ஆண்டில் மத்திய அரசு வகுத்திருந்தது.
தற்போது இந்த விதிகளில் அதிரடி மாற்றங்களைச் செய்து புதிய விதிமுறைகளுடன் அரசிதழ் அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2026ம் ஆண்டிற்கு முன்னதாகப் பதிவு செய்த அனைத்துச் சங்கங்களும், தாங்கள் எந்தெந்த மாநிலங்களில் செயல்படுகிறோம் மற்றும் நிதியின் நோக்கம் என்ன என்பதை ஒரு வருடத்திற்குள் மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும்.
புதிய விதிகளின்படி, மதக் கல்வி மற்றும் கலாசாரப் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளின் போது ‘மதமாற்றம்’ செய்வதைத் தவிர்க்க வேண்டும். இந்திய வம்சாவளியைச் சேராத வெளிநாட்டினர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் முக்கியப் பொறுப்புகளில் பதவி வகிக்க அனுமதி இல்லை.
அதேபோல், நிறுவனத்தின் சமூக ஊடக கணக்கு விவரங்களையும் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். வெளிநாட்டு நிதியைப் பெற்ற நிறுவனங்கள், அதன் பயன்பாடு குறித்து கள ஆய்வு செய்யத் தனிக்குழு அமைக்கப்படும்.
நிதிப் பயன்பாட்டில் 75% செலவு செய்த பின்னரே அடுத்த தவணை நிதி விடுவிக்கப்படும். பட்டயக் கணக்காளர்களால் சான்றளிக்கப்பட்ட கடுமையான ஆவணங்கள் மற்றும் ‘படிவம் எப்சி-3பிபி’ போன்ற புதிய வடிவங்கள் அடுத்தடுத்த நிதித் தவணைகளை வெளியிடுவதற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
செய்தி மற்றும் நடப்பு விவகாரங்களை வெளியிடும் அமைப்புகள் வெளிநாட்டு நிதி பெறத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களது நிர்வாகிகள் எழுதிய புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் குறித்த விவரங்களையும் அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், கடந்த இரண்டு நிதி ஆண்டுகளில் குறைந்தபட்சம் 10 லட்சம் ரூபாய் வெளிநாட்டு நிதியைத் தங்களது பணிகளுக்காகச் செலவு செய்த நிறுவனங்கள் மட்டுமே இந்தப் பதிவைப் புதுப்பிக்க முடியும் எனக் கூறியுள்ளது.
வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புணர்வையும் அதிகரிக்கும் நோக்கில் இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு நிதி வரத்து மற்றும் அதன் பயன்பாட்டில் முறைகேடுகள் நடப்பதைத் தடுத்து, தேசியப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


