தந்தை ராமதாஸ் உடனான சந்திப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த பாமக தலைவர் அன்புமணி “இனி நல்லதே நடக்கும்” என இருமுறை அழுத்தமாக தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் பாமக இரு அணிகளாக போட்டியிட்டது. ராமதாஸ், அன்புமணி மோதல் காரணமாக கட்சிக்குள் ஏற்பட பிளவால் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை.
தேர்தல் தோல்விக்குபின் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்ததுடன் அன்புமணியை விமர்சிப்பதையும் அடியோடு நிறுத்தினார். அதே வேளையில், மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளுக்காக அறிக்கை வாயிலாக குரல் கொடுத்தார்.
தைலாபுரம் தோட்டத்துக்கு தொடர்ந்து வருகை தந்த கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, சேலம் மேற்கு முன்னாள் எம்எல்ஏ அருள் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகளும், ராமதாஸ் உடனான சந்திப்பை தவிர்த்தனர்.
ஒருங்கிணைந்த பாமகவால் மட்டுமே எதிர்காலத்தில் சிறப்பாக செயல்பட முடியும் என கருதி அவர்கள் ஒதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே பாமக பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் 2026 ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைய உள்ளது. ஏற்கனவே கட்சி யாருக்கு? என்பது தொடர்பான வழக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அடுத்தடுத்து இவ்வழக்கில் திருப்பம் ஏற்படலாம் என தகவல்கள் பரவின.
இதனிடையே ராமதாஸ்- சரஸ்வதி அம்மையாரின் 61ம் ஆண்டு திருமண நாளையொட்டி சபரிமலைக்கு சென்று திரும்பியிருந்த அன்புமணி, தனது குடும்பத்தினருடன் தைலாபுரத்துக்கு 4 கார்களில் சென்று பெற்றோரை சந்தித்தார்.
அவருடன் மனைவி சவுமியா, சமீபத்தில் குழந்தை பெற்ற மகள் சங்கமித்ரா குழந்தையுடன் சென்றிருந்தனர். அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர்.
இந்நிலையில், தைலாபுரம் இல்லத்துக்கு வந்த பாமக தலைவர் அன்புமணியை ராமதாஸ் ஆரத்தழுவி கண்ணீருடன் வரவேற்றார். இருவரும் ஒருவரையொருவர் ஆரத்தழுவி அழுது பாசத்தை பகிர்ந்து கொண்டனர். இதன்போது சவுமியா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் கண்கலங்கியுள்ளனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, “தந்தை, தாயை குடும்பத்தோடு நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம். இனி எல்லாம் நல்லதே நடக்கும் என்று கூறினார்.
இது குறித்து பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், “ராமதாஸ்- அன்புமணி சந்திப்பு நல்ல அறிகுறிதான். இருவரின் சந்திப்பால் பாமக வலுவடையும். ராமதாஸ் – அன்புமணி ஒன்றாக சந்தித்துக் கொண்டது வரவேற்கத்தக்கது” என்று தெரிவித்தார்.


