வெனிசுலா நாட்டில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 11,000 பேரைக் காணவில்லை என அந்நாட்டின் தற்காலிக அதிபர் தெரிவித்துள்ளார்.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை மாலை, 39 வினாடிகள் இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இவை ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 அலகுகளாக பதிவாகியுள்ளன. அதைத்தொடர்ந்து 30 முறை நில அதிர்வு உணரப்பட்டது.
100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் உருக்குலைந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 188 ஆக இருந்த நிலையில், தற்போது 235 ஆக அதிகரித்துள்ளது, மேலும், 1500க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கையும் 4,300 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 1900ம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த நாட்டையும் நிலைகுலையச் செய்துள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கம் வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் அருகே சுமார் 20 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இதன் காரணமாக, வெனிசுலா தலைநகர் கராகஸில் நூற்றுக்கணக்கான பன்னெடுக்குமாடி குடியிருப்புகளும் வணிக வளாகங்களும் இடிந்து விழுந்தன. ஏராளமான மின் கம்பங்களும் முறிந்து விழுந்தன. நிலநடுக்கத்தால் சாலைகளில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால், காணும் இடமெல்லாம் கட்டட இடிபாடுகளின் குவியல்களாக காட்சியளிக்கின்றன.
தலைநகர் கராகஸ், லா குவைரா ஆகிய பகுதிகள் பேரழிவு மண்டலங்களாக மாறியுள்ளன. ஒட்டுமொத்த நகரமும் தூசு மண்டலமாக மாறியுள்ளது.
வீடு, உடமைகளை இழந்த மக்கள், அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், சாலைகளிலும் பூங்காக்களிலும் தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மின்சாரம் மற்றும் மொபைல் சிக்னல்கள் இன்றி தொலைத்தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவிற்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக அமெரிக்கா, கியூபா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் மீட்பு குழுக்களை அனுப்பி வைத்துள்ளன. இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
நகரின் முக்கிய பகுதிகளில் மீட்பு குழுவினர், தன்னார்வலர்களுடன் இணைந்து இடிபாடுகளை அகற்றி உயிருக்குப் போராடுபவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நிலநடுக்கத்தால் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டின் தற்காலிக அதிபர் டெல்சி ரொட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்தின் தீவிரம் கருதி அவசர நிலை பிரகடனப்படுத்தபடுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
கூகுள் தொழில்நுட்பத்தின் உதவியால் வெனிசுலா மக்களுக்கு நிலநடுக்கம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு அடுத்த சில நொடிகளிலேயே நிலநடுக்கம் ஏற்பட்டதால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.
புவியின் மேற்பரப்பில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாலேயே சேதம் அதிகளவில் உள்ளது. இடிபாடுகளுக்குள் இன்னும் ஏராளமான மக்கள் சிக்கியிருக்கலாம் என்பதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் பலி எண்ணிக்கை ஆயிரத்தை கடக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நிலநடுக்க பாதிப்பு காரணமாக தலைநகர் கராகஸில் உள்ள சைமன் பொலிவார் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
வெனிசுலாவில் இருந்து வரும் ஆரம்பக்கட்டத் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாகவும் அந்நாட்டுக்கு உடனடியாக உதவிகளை வழங்க தயாராக உள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா வெனிசுலாவிற்கு $150 மில்லியன் நிதியுதவியையும், மீட்புப் பணிகளுக்காக தனது உயரடுக்கு மீட்புக் குழுக்களையும் அனுப்பியுள்ளது. இத்தாலி உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளும் தங்களது உதவிகளை அறிவித்துள்ளன.


