நாட்டிலேயே முதல்முறையாக சென்னை ஐஐடியில் தாவர செல் நொதித்தல் உயர் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தாவர செல் நொதித்தல் தொழில்நுட்ப மையத்தை ஹெர்பாலைஃப், சென்னை ஐஐடி இணைந்து அமைத்துள்ளன. இதன் மூலம், மூலிகைப் பொருட்கள் உள்ளிட்ட மருத்துவ பொருட்கள் உருவாக்கப்பட உள்ளன.
ஹெர்பாலைஃப், ஐஐடி மெட்ராஸ் இணைந்து, இந்தியாவின் முதல் தாவர செல் நொதித்தல் தொழில்நுட்பத்திற்கான உயர்சிறப்பு மையத்தை தொடங்கியுள்ளன. இதன் மூலம் தாவர அடிப்படையிலான ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு தயாரிப்புகள் ஊக்குவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி ஹெர்பாலைஃப் இண்டர்நேஷனல் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து, தாவர செல் நொதித்தல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் ‘ஹெர்பாலைஃப்- ஐஐடி மெட்ராஸ் உயர் சிறப்பு மையத்தைத் தொடங்கியுள்ளன.
இதன் மூலம் தாவரங்களிலிருந்து உடல்நலத்திற்கு தேவையான பொருட்கள் உருவாக்கப்படவுள்ளது. தாவர செல் நொதித்தலைப் பொறுத்தவரை பயன்பாட்டு ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு இந்தியாவிலேயே இதுதான் முதலாவது பிரத்யேக ஆய்வகமாகும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இத்திட்டம் கடந்த ஜூன் 22-ம் தேதி தொடங்கப்பட்டது. தாவர செல் நொதித்தல் தொழில்நுட்பத்தில் நிலையான கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பயன்பாட்டு ஆராய்ச்சி ஆகியவற்றுக்கான தேசிய மையமாக இதனை விளங்கச் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட சாகுபடி முறைகள், இறுதிகட்ட செயலாக்கம், வளர்சிதை மாற்றப்பொருள் பகுப்பாய்வுத் தளங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, தொழில்நுட்ப பரிமாற்றம், கண்டுபிடிப்புகள், தொழில்முனைவு ஆகியவற்றை மேம்படுத்துதல், வளர்ந்துவரும் இத்துறையில் திறமையான மனிதவளத்தை உருவாக்குதல் போன்றவற்றை ஊக்குவிக்கவும் இம்மையம் முயற்சி எடுக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த உயர்சிறப்பு மையமானது எதிர்காலத்திற்கான அறிவியல் திறன்களை உருவாக்குவதில் முக்கிய முதலீடாகும். இந்த முயற்சியின் மூலம் ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், கண்டுபிடிப்பாளர்கள் தாவர அடிப்படையிலான தொழில்நுட்பங்களை ஆராயவும், ஊட்டச்சத்து அறிவியலின் முன்னேற்றங்களுக்கு பங்களிக்கவும், ஆய்வகக் கண்டுபிடிப்புகளுக்கும் நடைமுறையில் தொழில்துறை பயன்பாட்டிற்கும் இடையேயான இடைவெளியை வெகுவாகக் குறைக்க உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


