சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக எல்.பி. சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் நிலத்தடி பணிகள் நடைபெறுவதால், நாளை (27.6.2026) முதல் எல்.பி. சாலையில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் சிக்னல் சந்திப்பிலிருந்து எல்.பி.-எம்.ஜி. சாலை சந்திப்பு வரை போக்குவரத்து முழுமையாக மூடப்படுகிறது.
திருவான்மியூரில் இருந்து திரு.வி.க. பாலம் நோக்கிச் செல்லும் அனைத்து பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் எல்.பி.-எம்.ஜி. சாலை சந்திப்பில் இருந்து எம்.ஜி. சாலை, சாஸ்திரி நகர் 1வது பிரதான சாலை, சாஸ்திரி நகர் 1வது அவென்யூ வழியாக எல்.பி. சாலையை சென்றடைய வேண்டும்.
பெசன்ட் நகரில் இருந்து 7வது அவென்யூ வழியாக வரும் வாகனங்கள் எம்.ஜி. சாலையில் வலதுபுறம் திரும்பி, சாஸ்திரி நகர் 1வது பிரதான சாலை மற்றும் 1வது அவென்யூ வழியாக எல்.பி. சாலையை அடைய வேண்டும்.
எல்.பி. சாலையிலிருந்து திருவான்மியூர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் சாஸ்திரி நகர் 1வது அவென்யூ, 11வது குறுக்கு சாலை, 8வது குறுக்கு சாலை, 10வது குறுக்கு சாலை வழியாக எம்.ஜி. சாலையை அடைந்து தங்களது இலக்கிற்கு செல்ல வேண்டும்.
திருவான்மியூரிலிருந்து திரு.வி.க. பாலம் நோக்கிச் செல்லும் இலகுரக மற்றும் இதர வாகனங்கள் எல்.பி.-எம்.ஜி. சாலை சந்திப்பில் இருந்து இந்திரா நகர் 2வது அவென்யூ 1வது பிரதான சாலை, 1வது அவென்யூ இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் சிக்னல் வழியாக எல்.பி. சாலையை சென்றடைய வேண்டும்.
இந்த போக்குவரத்து மாற்றம் காரணமாக, சாஸ்திரி நகர் 1வது பிரதான சாலை-எம்.ஜி. சாலை-எல்.பி. சாலை மற்றும் சாஸ்திரி நகர் முதலாவது அவென்யூ 1வது பிரதான சாலை பகுதிகள் தற்காலிகமாக இருவழிப் பாதைகளாக மாற்றப்படுகின்றன.
அதே நேரம், சாஸ்திரி நகர் 1வது பிரதான சாலை திரு.வி.க. பாலம் நோக்கி ஒருவழிப் பாதையாகவும், 11வது குறுக்கு சாலை திருவான்மியூர் நோக்கி ஒருவழிப் பாதையாகவும் செயல்படும். இந்திரா நகர் 2வது அவென்யூவில் கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


