வாடகை தாய் மூலம் பெற்றுக் கொள்ளும் குழந்தைக்கு, பெற்றோர் உரிமை கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மீது 4 வாரங்களுக்குள் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர், தங்களுக்கு வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தைக்குப் பெற்றோர் உரிமை கோரி தாக்கல் செய்த மனுவை நாமக்கல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி ஷமீம் அகமது, வாடகைத் தாய் விவகாரத்தில் பெற்றோர் உரிமை கோரும் மனுக்கள் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் 4 வாரங்களுக்குள் விசாரித்து இறுதி உத்தரவு பிறப்பிக்கும்படி ஆணையிட்டுள்ளார்.
அத்துடன், பெற்றோர் உரிமை கோரி நாமக்கல் தம்பதி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நாமக்கல் நீதிமன்ற உத்தரவையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
தகுதிவாய்ந்த அதிகார அமைப்பால் ஏற்கனவே வழங்கப்பட்ட வாடகைத் தாய் தகுதிச் சான்றிதழை மறுஆய்வு செய்ய மாஜிஸ்திரேட்டுகளுக்கு அதிகாரம் இல்லை எனவும், நீதிமன்றங்களின் பரிசீலனை என்பது தம்பதியரின் சட்டபூர்வ இணக்கம், வாடகைத் தாயின் சுய விருப்பம் மற்றும் குழந்தையின் நலன் ஆகியவற்றோடு முடிவதாகவும் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் மோசடி, போலியான ஆவணங்கள் அல்லது வணிக ரீதியிலான வாடகைத் தாய் முறை போன்ற சந்தேகங்கள் இருந்தால் மட்டுமே ஆழமான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், சட்டப்படியான வயது வரம்பான 50 வயது என்பது, ஒரு பெண் 51 வயதை எட்டும் வரை தகுதியுடையவராகவே கருதப்படுவார் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த உத்தரவின் மூலம், வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றெடுக்கும் தம்பதியர்கள் தங்களின் சட்டப்பூர்வ உரிமைகளைப் பெறுவதில் ஏற்படும் தேவையற்ற காலதாமதமும், அலைச்சல்களும் தவிர்க்கப்படும் என சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


